கோவை : கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு, இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள், கட்டாயம் "ஹெல்மெட்' அணிய வேண்டுமென, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை, கல்லூரி நிர்வாகத்தினர் கடுமையாக்கியுள்ளனர்.தமிழகத்தில், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம், "ஹெல்மெட்' அணிய வேண்டும், என, உத்தரவிட்டபோது, அனைவரும் "ஹெல்மெட்' வாங்கினர். சில வாரங்களில், "கட்டாயம்' என்பதை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டதால், வாகனம் ஓட்டுவோரும் "ஹெல்மெட்' அணிவதை கைவிட்டனர்.விபத்து ஏற்படும்போது, "ஹெல்மெட்' அணியாததால், தலையில் அடிபட்டு, உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பது அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, கோவையில் கல்லூரி மாணவர்கள், கட்டாயம் "ஹெல்மெட்' அணிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.வேண்டுகோள்கோவையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், "கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனங்களை அதிக வேகமாகவும், கவனக்குறைவாகவும், கட்டுப்பாடின்றியும் ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. அசம்பாவிதத்தை தவிர்க்க கல்லூரி மாணவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை, கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயமாக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.கமிஷனரின் உத்தரவை கோவையிலுள்ள, தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமல்படுத்தியுள்ளன. கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.இருசக்கர வாகனத்தில், "ஹெல்மெட்' அணிந்து வந்தால்தான், கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற, கட்டாய உத்தரவுகளை பின்பற்றத்துவங்கியுள்ளனர். இன்னும் சில கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயப்படுத்தும் பணி நடந்து வருகிறது."அனைவருக்கும்'கோவையிலுள்ள கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது:இருசக்கர வாகனத்தில் வருவோர், "ஹெல்மெட்' அணிவது பாதுகாப்பானது. போலீஸ் கமிஷனரின் அறிவுறுத்தல் படி, கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் "ஹெல்மெட்' அணிய துவங்கியுள்ளனர்.அதேபோன்று, மாணவர்களும் "ஹெல்மெட்' அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் "ஹெல்மெட்' அணிந்து வந்தால் மட்டுமே, கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என, வாட்ச்மேன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா, வாகனத்திற்கு இன்சூரன்ஸ் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கிறோம்.இவை இல்லாவிட்டால், பெற்றோரை கல்லூரிக்கு வரவழைத்து, போக்குவரத்து விதிமுறைகள் பற்றி தெரிவித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.இவ்வாறு, கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
யாருக்காக...உயிரிழப்பு விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவர்களுக்கு கட்டாய "ஹெல்மெட்' விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி, மாணவர்கள் ஹெல்மெட் கொண்டு சென்றாலும், பயணத்தின் போது அணிவதில்லை. தலையில் அணிய வேண்டிய "ஹெல்மெட்டை' வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது, வைத்துக்கொள்கின்றனர். கல்லூரி அருகே சென்றதும், ஹெல்மெட்டை அணிகின்றனர். அதேபோன்று, கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் கழற்றி வைத்து விடுகின்றனர். தலைக்கவசம், உயிர்க்கவசம் என்பதை அறிந்து, "ஹெல்மெட்டை' காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் பயன்படுத்த வேண்டும்.இது போலீசார், கல்லூரி நிர்வாகத்தினர் கவனத்திற்கு வரும்போது, தண்டனை தரப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது, விபத்துகள் குறையும் என்பதை நம்பலாம்.
0 comments:
Post a Comment